புதுடெல்லி: பிரான்சும் இந்தியாவும் சேர்ந்து 'உண்மையான பலதரப்பு உலக வர்த்தக ஏற்பாட்டை' மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடர்பில் பிரான்சின் வெளியுறவு அமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டு இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாடுகளுக்கு இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவ உறவை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் அண்மையில் தொலைபேசி மூலம் பேசினர்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யேவ்ஸ் லி டிரைனும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பேசினர். இந்தோ-பசிபிக் பகுதியில் இந்த இரண்டு மாபெரும் இறையாண்மை நாடுகளுக்கு இடையில் நிலவும் அரசியல் நம்பிக்கைமிக்க நல்லுறவின் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் தங்கள் உத்திபூர்வ உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் என்று அமைச்சர்கள் இணங்கியதாக பிரான்ஸ் அமைச்சு குறிப்பிட்டது.
அடுத்த வாரம் நியூயார்க்கில் சந்திக்கவும் இரு அமைச்சர்களும் இணங்கினர்.
அந்தச் சந்திப்பின்போது உண்மையான பலதரப்பு அனைத்துலக வர்த்தக ஏற்பாடு ஒன்றை பலப்படுத்தும் நோக்கத்தில் பொதுவான, உருப்படியான செயல்திட்டங்களின் பேரில் இரு தலைவர்களும் செயல்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோ-பசிபிக் பகுதியிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலவும் அண்மைய நிலவரங்கள் பற்றியும் தாங்கள் விவாதித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறினார்.