பெங்களூரு: கடந்த தேர்தலில் வெற்றிபெற மோடி அலை உதவிய போதிலும், அடுத்து வரும் தேர்தலில் மோடி அலையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு பாஜக வட்டாரங்களில் முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே கர்நாடகாவில் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
"கடந்த கால தேர்தல்களின்போது பல மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றவும் ஆட்சியைத் தக்க வைக்கவும் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை கைகொடுத்தது. ஆனால் இம்முறை அது மட்டுமே போதுமானதல்ல.
"சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ளூர் தலைவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்," என அண்மையில் பதவி விலகிய எடியூரப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

