வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்த பணப்பையை பறித்து மரத்தின் மீது ஏறிய குரங்கு, பையிலிருந்த பணத்தை மக்கள் மீது மழையாக பொழிந்த சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.
ராம்பூர் மாவட்டம், ஷாகாபாத் பகுதியைச் சேர்ந்த அந்த வழக்கறிஞர், முத்திரைகள் வாங்குவதற்காக ஒரு பையில் ரு.2 லட்சம் ரொக்கத்துடன் கருவூல அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
அங்கிருந்த ஒரு குரங்கு, வழக்கறிஞரிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் குரங்கை துரத்தினார். ஆனால், அருகிலிருந்த மரத்தில் குரங்கு வேகமாக ஏறியது.
குரங்கை வழக்கறிஞர் துரத்திச் சென்றதை பார்த்தவர்கள் மரத்தடியில் கூடினர். பணப்பையை திறந்த குரங்கு, அதிலிருந்த இரண்டு பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு பையை மட்டும் கீழே போட்டது. பணப்பையை வழக்கறிஞர் எடுத்து பார்த்தபோது அதில் ரு.1 லட்சம் மட்டுமே இருந்தது.
இதற்கிடையில், இரண்டு பணக்கட்டுகளை எடுத்த குரங்கு, அதைப் பிரித்து மரத்தில் தாவி குதித்தபடி கீழே விசிறியடித்தது.
மரத்தடியில் இருந்தவர்கள் பணத்தை எடுத்து வழக்கறிஞரிடம் கொடுத்தனர். எனினும், ரு.95,000 மட்டுமே வழக்கறிஞருக்குக் கிடைத்தது. பணத்தை எடுத்த சிலர், அதை வழக்கறிஞரிடம் கொடுக்காமல் சென்றுவிட்டது தெரிந்தது.
எனினும், “இந்த அளவாவது பணம் திரும்ப கிடைத்ததே” என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த மக்களுக்கு வழக்கறிஞர் நன்றி கூறினார்.
பணத்தைக் குரங்கு வீசியதையும் அதை மக்கள் பொறுக்கி எடுத்ததையும் காணொளி எடுத்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.