புதுடெல்லி: பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய பயண விதிமுறைகளை அந்நாடு வெளியிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும்கூட, தடுப்பூசி போடாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்றும் அவர்கள் பத்து நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிய வந்துள்ளது.
இது இந்திய தரப்புக்கு மனக்குறையை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்காவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை போட்டுக்கொள்பவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனக் கருதப்படுவார்கள் என பிரிட்டன் வெளியிட்ட புதிய பயண விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்ட்ராஸெனக்கா, ஃபைசர், மொடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது.
இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் பயணத்துக்கு முன்பு, பிரிட்டன் சென்ற பிறகு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கும். இதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளையும் தடுப்பூசி வகைகளையும் கொண்டு பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படும் பயணிகளுக்கான பல்வேறு பயண விதிகளை அந்நாடு அறிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார்.