புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மிக விரைவில் புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் இணைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அட்டைகள் மொத்தம் 12 இலக்க எண்களைக் கொண்டிருக்கும் என்றும் இதன் மூலம் புதிய திட்டங்களால் விளையும் நன்மைகளை விவசாயிகள் முழுமையாகப் பெற முடியும் என்றும் மத்திய விவசாய நலத்துறையின் கூடுதல் செயலாளர் விவேக் அகர்வால் கூறியுள்ளார்.
புதிய அட்டைகள் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஏற்பாட்டின் மூலம் விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களைக் கொள்முதல் செய்வது எளிதாகும் என்றார்.
"கொள்முதல் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இனி சிறப்பாகத் திட்டமிட முடியும். மேலும், எட்டுக் கோடி விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவார்கள்," என்று விவேக் அகர்வால் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கி, ஏராளமான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

