18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தது
புதுடெல்லி: சிறார்களுக்கான தடுப்பூசி மிக விரைவில் அறிமுகமாகும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இ்த்தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என்றும் இது தொடர்பான விரிவான அறிக்கை மத்திய அரசிடம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார்.
இதற்கிடையே, சிறார்களுக்கான புதிய கொரோனா தொற்றுத்தடுப்பு மருந்தானது திரவ வடிவில் இருக்கும் என்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது மூக்கு வழி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
''சிறார்களுக்கான தடுப்பூசி ஆயிரம் குழந்தைகள், பதின்ம வயதினருக்குச் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மூக்கு வழி செலுத்தப்படும் சொட்டு மருந்தின் இரண்டாம் கட்டப் பரிசோதனை தொடங்க உள்ளது. இது மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.
"முதலில் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு பிறகு மூக்கு வழி சொட்டு மருந்து தரப்படும். இல்லையெனில் இரண்டு முறை சொட்டு மருந்து மூக்கின் வழி செலுத்தப்படும். மூன்றாவதாக முதலில் சொட்டு மருந்து அளித்த 28 நாள்களுக்குப் பிறகு கோவேக்சின் தடுப்பூசி போடப்படும்," என்றார் கிருஷ்ணா எல்லா.
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 820 மில்லியன் பேருக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து 18 வயதுக்குட்பட்டவர்கள் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது. சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியைத் தயாரித்த ஹைதராபாத்தில் இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம்தான் சிறார்க்கும் பதின்ம வயதினருக்குமான தடுப்பூசியையும் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

