புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடப்பு எம்எல்ஏக்களில் சுமார் 50 விழுக்காட்டினருக்கு பாஜக தலைமை மீண்டும் வாய்ப்பு தராது என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைமை இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இம்முடிவை எடுத்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா, பஞ்சாப், மணிப்பூர், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் ஆகிய ஏழு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள, பாஜக ஆளும் குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களின் முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பாஜகவைப் பொறுத்தவரை மாநில அளவிலான பிரச்சினைகளுடன், மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இயல்பாக எழக்கூடிய அதிருப்தியையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
இதை மனதிற்கொண்டே இந்தாண்டு நடைபெற்ற ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலின்போது பதவியில் இருந்த எம்எல்ஏக்களில் சுமார் 15 முதல் 20 விழுக்காட்டினருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை.
அதற்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளதை அடுத்து, ஏழு மாநிலங்களுக்கான இடைத்தேர்தலிலும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி இம்முறை சுமார் 50 விழுக்காடு எம்எல்ஏக்கள் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
தேர்தல் நடக்கும் ஏழு மாநிலங்களிலும் கள நிலவரங்கள் குறித்து பாஜக தலைமை சத்தமின்றி ஆய்வு நடத்தி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து தனிப்பட்ட அறிக்கை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
"அந்த அறிக்கை கட்சித் தலைமை நடத்திய ஆய்வின்போது திரட்டப்பட்ட தகவல்களுடன் ஒத்துப்போனால் மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பாஜகவில் நடப்பு எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போவது புதிதல்ல.
"கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் தேர்தலின்போது பதவியில் இருந்த 43 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல் ஜார்க்கண்ட் தேர்தலிலும் 12 எம்எல்ஏக்கள் வாய்ப்பு இழந்தனர்," என்று பாஜக நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மனதில் உள்ள மனக்குறையின் தாக்கத்தையும் கோபத்தையும் குறைக்க இயலும் என்று பாஜக தலைமை நம்புவதாகத் தெரிகிறது," என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

