ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலருக்குப் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் போலிசார் கூறியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் தங்கு விடுதியில் நடைபெற்ற கேளிக்கை விருந்து நிகழ்வில், போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலிசார் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது கெல்வின் என்பவர் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தெலுங்கு திரையுலத்தினருக்கு தாம் போதைப்பொருள் விநியோகித்து வருவதாகக் கூறினார். இது அச்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் அளித்த தகவலின் பேரில் முன்னணி நடிகைகளான ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர்கள் ரவிதேஜா தருண், நவ்தீப் உட்பட 13 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது. அதில் அவர்களுக்கும் கெல்வினுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
"சிலரது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களிடம் போதைப்பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்பதும் உறுதியானது. வழக்கை திசைதிருப்ப கெல்வின் பொய்யான தகவல்களை அளித்துள்ளார்," என்று காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.