அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்: உலக நாடுகளுடன் இந்தியா ஆலோசனை
புதுடெல்லி: கொரோனா சான்றிதழை அங்கீகரிப்பது தொடர்பாக உலக நாடுகளுடன் இந்தியா ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியை பிரிட்டன் அரசு தனது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் இணைத்துக்கொண்டதாக அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்தில் கொரோனா சான்றிதழ் தொடர்பில் விதிமுறைகளின் அடிப்படையில் வெளிப்படையான செயல்பாட்டை இந்த உலகம் எதிர்பார்க்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றும் என்றும் அனைத்துலகச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு உருவம் கொடுக்கும் என்றும் அவர் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க பிரிட்டன் அரசு மறுத்தது. இது பாரபட்சமான நடவடிக்கை என்று இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
மேலும், பிரிட்டனுக்கு எதிராக பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், கொரோனா சான்றிதழை அங்கீகரிப்பது தொடர்பில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
இந்திய நிலவரம்
இதற்கிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் 31,923 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் மேலும் 282 பேர் இறந்துவிட்டனர். தற்போது 301,640 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 830 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 7.1 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றின் முதல், இரண்டாம் அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.