புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் மண்ணில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறியதை தலிபான்கள் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக காணொளி வசதி மூலம் நடைபெற்ற ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பரந்த, ஆப்கானின் அனைத்துத் தரப்பு பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய செயல்பாட்டை தலிபான்களிடம் இருந்து அனைத்துலகச் சமூகம் எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் கூறினார்.
"ஆப்கான் மக்களின் மனிதாபிமான தேவைகள் தொடர்பில் அனைத்துலக சமூகம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். உதவிகளை வழங்குவோர்க்கு எந்தவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக் கூடாது என்பதுடன் நேரடியாக மக்களை அணுக அனுமதிக்க வேண்டும்," என்று ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பின் டுவிட்டரில் ஜெய்சங்கர் பதிவிட்டார்.
ஆப்கானிஸ்தானில் எந்தவிதமான தீவிரவாதத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்று தலிபான்கள் தரப்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சொன்னதைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
தலிபான்கள் விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சு பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் அவசரப்படக் கூடாது என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

