புதுடெல்லி: தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக நிபுணர் குழு அமைத்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிபுணர் குழு குறித்து அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரது கைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக அண்மையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
மத்திய அரசு இதை மறுத்த நிலையில், எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தின.
இந்தப் பிரச்சினை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் சில நாள்கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கின.
மேலும், இது குறித்து விசாரிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நிபுணர் குழு குறித்து அடுத்த வாரம் விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
குழுவில் தாங்கள் நியமிக்க இருந்த சில நிபுணர்கள் அதற்கு மறுத்துவிட்டதால் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

