புதுடெல்லி: கொரோனா நெருக்கடியில் இருந்து நாடு மெல்ல மீண்டு வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 74 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடப்பாண்டில் இதுவரை ரூ.5.7 லட்சம் கோடி நேரடி வரிகள் மூலம் வசூலாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நேரடி வரியாக ரூ.570,568 கோடி வசூலானதாகவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.27 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலானதாகவும் அவ்வாரியம் தெரிவித்தது.
இது முந்தைய ஆண்டைவிட 74.4 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்டுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், 2019-2020ஆம் நிதியாண்டைவிட 27 விழுக்காடு அதிகம் என்று சுட்டிக்காட்டி உள்ளது.
"மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.6.45 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 47 விழுக்காடு அதிகம். இதே போல் 2019-20 நிதியாண்டை விட 16.75 விழுக்காடு அதிகம்.
"இதேபோல் நடப்பு நிதியாண்டின் முதல், இரண்டாம் அரையாண்டுகளுக்கான முன்கூட்டிய வரி வசூல் ரூ.253,353 கோடியாக உள்ளது.
"இது முந்தைய நிதியாண்டை விட 56 விழுக்காடு அதிகம்," என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

