புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகி உள்ள 'குலாப்' புயல் இன்று ஒடிசா, ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விசாகப்பட்டினம், கோபால்பூருக்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்ற பிறகு கரையைக் கடக்கும் எனத் தெரிகிறது. 'குலாப்' என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
புயல் அறிகுறி உருவாவதை ஒட்டி ஒடிசா, ஆந்திராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.