புதுடெல்லி: இந்திய விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவைத் தெரி வித்துள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தச் சட்டங்கள் மூலம் 'கார்ப்பரேட்' நிறுவனங் களுக்கு கீழ் விவசாயிகள் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அது ஒரு குழுவை நியமித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லாப் கூறுகையில் "விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களால் செப்டம்பர் 27ஆம் தேதி (இன்று) அமைதியான முறையில் நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள்," என்றார்.
கடந்த ஒன்பது மாதங்களாக போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக பிரதமர் மோடி கூறியது பொய்யானது. 2012-2013ஆம் ஆண்டுகளில் விவசாயத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைத்த வருமானத்தைவிட 2018-2019ஆம் ஆண்டுகளில் கிடைத்த வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா அரசாங்கம், ஆம் ஆத்மி கட்சி, தெலுகு தேசம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.