புதுடெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரும் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 33 தலைவர்களுக்கு பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி பிரசாத் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசு அதற்கான உரிய காரணத்தை தெரிவிக்கவில்லை என்று தனது கடிதத்தில் தேஜஷ்வி யாதவ் சுட்டிக் காட்டியுள்ளார்.
"இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்," என்று வலியுறுத்திய அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர்களான மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவ் உட்பட பீகாரைச் சேர்ந்த 11 கட்சித் தலைவர்கள் கூட்டாக பிரதமரை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமானது, தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
"சாதிகள் திடீரென்று உருவாகி விடவில்லை. காலம் காலமாக மக்கள் செய்யும் தொழில்கள், பாகுபாடுகள் காரணமாகவே சாதிகள் உருவாயின. ஏற்றத்தாழ்வுகளையும் சாதி சார்ந்து தொழில் செய்யும் முறையையும் ஒழித்து சமத்துவமான சமுதாயம் அமைத்தால்தான் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். "அதற்கு அனைத்து சமூகங்களும் முன்னேற வேண்டும். அதற்கான அடிப்படை இடஒதுக்கீடு என்பதால் அதை உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்," என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

