கோல்கத்தா: இத்தாலியில் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க தனக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
ரோமில் நடக்கவுள்ள உலக அமைதி மாநாட்டில் போப் பிரான்சிஸ், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருடன் பங்கேற்க மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, "ரோமில் உலக அமைதி பற்றிய மாநாட்டில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டேன்.
"இம்மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு இத்தாலி சிறப்பு அனுமதி அளித்தது.
"ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. முதலமைச்சருக்கு இது சரியல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது," என்றார்.
"உங்களால் என்னைத் தடுக்க முடியாது. நான் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் இது தேசத்தின் மரியாதையைப் பற்றியது.
ஞபிரதமர் மோடி இந்துக்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். நானும் ஓர் இந்துப் பெண், ஏன் என்னை இந்தக் கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை? நீங்கள் முற்றிலும் பொறாமைப்படுகிறீர்கள் பிரதமர் மோடி," என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான தேபாங்சு பட்டாச்சார்யா தேவ் தமது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
"முன்னதாக மத்திய அரசு மம்தா பானர்ஜியின் சீனா பயணத்தின் அனுமதியையும் ரத்து செய்தனர். அனைத்துலக உறவுகள், இந்தியாவின் நலன்களை மனதில் கொண்டு அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது ஏன் இத்தாலிக்கும் அனுமதி மறுக்கிறீர்கள் மோடி ஜி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மத்திய அரசு இது வரை கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.