புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நாடு தழுவிய அளவில் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நாற்பது விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஸான் என்ற விவசாய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எனப் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் சில மாநில கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தன. அதேபோல், தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநில அரசுகளின் ஆதரவும் கிடைத்தது.
நாடு முழுவதும் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. நேற்று காலை ஆறு மணி முதல் மாலை நான்கு மணிவரை நீடித்த இந்தப் போராட்டத்தின்போது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் விவசாயிகள் திரளாகக்கூடி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது. டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையிலும் மறியல் நடந்தது. டெல்லி, ஹரியானாவில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், சில மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மறியல் போராட்டம் காரணமாக பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பீகார், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில வட மாநிலங்களும் முடங்கின. கேரளாவில் பல தொழிற்சங்கங்களின் ஆதரவோடு முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தன. நேற்று நடந்த போராட்டத்தின் மூலம் விவசாயிகளின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும் எனும் கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டத்துக்குட்பட்டவை என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என ஊடகங்கள் தெரிவித்தன.