புதுடெல்லி: கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்ப திட்டமிட்ட தனியார் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகிய முஸ்லிம்களுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் ஏராளமான முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் சுமார் ஐம்பது இந்து குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்குள்ள ஒரேயொரு இந்துக் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துக் கட்டடம் எழுப்ப முயன்றது. இதை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
"நாங்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் மோதலை உண்டாக்கி ஆதாயம் தேட தனியார் நிறுவனம் முயற்சி செய்கிறது.
"எங்களது சகோதரத்துவத்தை பாதிக்கும் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறை, மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோவில் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும்," என இஸ்லாமியர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவில் நிலத்தில் எந்தவித கட்டுமானத்துக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று மாநகராட்சி நிர்வாகமும் ஆக்கிரமிப்பு எதையும் அனுமதிக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையும் நீதிமன்றத்தில் தெரிவித்தன.
அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாமியா நகர் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

