புதுடெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் பதினான்காவது கூட்டத்தில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, கர்நாடக அரசு காவிரி நீரை முறையாக வழங்கவில்லை என தமிழகத் தரப்பில் புகார் எழுப்பப்பட்டது.
"உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா நடந்து கொள்ளவில்லை. அம்மாநிலத்தில் பருவ மழை அதிக அளவில் பெய்து வருகிறது. எனினும் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்கவில்லை. நடப்பு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதிவரை 37.3 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
"காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் செயல்படுத்தாத கர்நாடக அரசு அக்டோபர் மாதத்துக்குரிய நீர் பங்கீட்டையும் தமிழகத்துக்கு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்," என்று தமிழக அரசு வலியுறுத்தியது.