புதுடெல்லி: இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென்னிந்தியக் குடும்பங்கள்தான் அதிகக் கடன்சுமையில் இருக்கின்றன என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2013-2019 காலகட்டத்திற்கான அனைத்திந்திய கடன், முதலீட்டு ஆய்வுத் தரவுகளைச் சுட்டி, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ எனும் உள்நாட்டு அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புறத்தைப் பொறுத்தமட்டில், ஆக அதிகமாக கேரளாவில் 47.8% குடும்பங்களும் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 5.1% குடும்பங்களும் கடனில் இருக்கின்றன.
ஊரகப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், 67.2 விழுக்காட்டுடன் தெலுங்கானா முதலிடத்திலும் 6.6 விழுக்காட்டுடன் நாகலாந்து கடைசி இடத்திலும் உள்ளன.
தென்னிந்தியாவில்தான் தனிநபர் வருமானம் அதிகம் என்ற நிலையில், அம்மாநிலங்களில் கடன்பட்டிருப்பதும் அதிகமாக இருப்பது முரணாக விளங்குகிறது.
கடன் - சொத்து விகிதத்தைப் பொறுத்தமட்டில், முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களை ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களே பிடித்துள்ளன.
இந்நிலையில், கொவிட்-19 பரவலின் தாக்கம் காரணமாக கடன்சுமை மேலும் கூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. 2020 இறுதிக் காலாண்டில் 33.8 விழுக்காடாக இருந்த வீட்டுக்கடன் - மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம், நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் 37.9 விழுக்காடாக உயர்ந்துவிட்டதாக இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) தரவுகள் குறிப்பிடுகின்றன.