201 நாள்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்பும் 193 நாள்களுக்குப் பின் இறப்பும் குறைந்தது
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐசிஎம்ஆர்) தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
பகுதி பகுதியாகப் பள்ளிகளைத் திறப்பது நல்லது என்றும் அனைத்துப் பள்ளிகளிலும் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கழகம் வலியுறுத்தி உள்ளது.
பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பள்ளியை மூட வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. முதலில் துவக்கப் பள்ளிகளை திறக்க வேண்டும். பின்னர் இடைநிலை, உயர் நிலைப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எளிதில் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மாணவர்களைக் கண்டறிவது, ஒருநாள் விட்டு ஒருநாள் என சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிப்பது உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளை மருத்துவ ஆய்வுக் கழகம் மத்திய அரசிடம் அளித்துள்ளது.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதிய விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். எனவே, பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் தொற்று எண்ணிக்கை 201 நாள்களுக்குப் பின்னர் 18,795 ஆகக் குறைவாகப் பதிவானது என சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்று முன்தினம் 179 பேர் பலியாகினர். இதன் மூலம் கடந்த 193 நாள்களுக்குப் பின் உயிரிழப்பும் குறைவாகப் பதிவாகி உள்ளது என்றும் அமைச்சு கூறியுள்ளது.

