புதுடெல்லி: இந்தியாவில் இயங்கி வரும் சீரம் மையம் ஏழு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு என கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்துள்ளது. இதை மருத்துவ ரீதியில் பரிசோதித்துப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், ஏழு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியை பரிசோதித்துப் பார்க்க 11 மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
"விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு ஏழு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பரிசோதனைக்கு உட்படுத்த உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது," என மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீரம் மையம் ஏற்கெனவே 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினருக்கான கொரோனா தடுப்பூசியை மருத்துவ ரீதியில் பரிசோதித்து வருகிறது.
இது ஆஸ்ட்ராஸெனக்கா வகை தடுப்பூசியாகும். எனினும் சீரம் மையம் அதை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. இந்தப் பிரிவினருக்கான பரிசோதனையின் முடிவில் முதற்கட்டமாக நூறு பங்கேற்பாளர்களைப் பற்றிய முழுத் தரவுகளையும் அந்நிறுவனம் மத்திய அரசிடம் அளித்துள்ளது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்காக பெரியவர்களுக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பயன்படுத்துவதற்கான ஸைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.