திருவனந்தபுரம்: ஜப்பானில் பின்பற்றப்படும் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்படி செயல்பட்டு மூன்று சென்ட் நிலத்தில் 400 மரங்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஹரி (படம்).
12 ஆண்டுகளுக்கு முன்பு தனது விளைநிலத்தை விற்றுவிட்டு பிழைப்புக்காக திருவனந்தபுரத்தில் குடியேறியுள்ளார் இவர்.
"வந்த இடத்திலும் செடி கொடிகளை வளர்த்த போதிலும், கடும் கோடை வெயிலால் எதுவும் துளிர்க்கவில்லை. எனினும், மனம் தளராமல் செயல்பட்டேன்.
"அப்போதுதான் தாவரவியலாளர் அகிரா மியாவாகியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கினேன். இதன் மூலம் வளர்க்கப்படும் மரங்கள் பத்து மடங்கு வேகமாகவும் 30 மடங்கு அடர்த்தியாகவும் வளரும்," என்கிறார் ஹரி.
18 மாதங்களில் தனது சிறிய நிலப்பகுதியை பசுமையான சோலையாக மாற்றிவிட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிடுபவர், மரங்களை இடைவெளி இல்லாமல் மிக நெருக்கமாக நடவேண்டும் என்றும் இதனால் சூரிய ஒளியை கிரகிப்பதற்காக அவை போட்டி போட்டுக்கொண்டு வளரும் என்றும் சொல்கிறார்.

