புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பலர் விலகி வருவது கட்சித் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென விலகியுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையே பகிரங்க மோதல் நிலவியது. இதன் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் விலகினார். இதனால் சித்து தரப்பு மகிழ்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக சித்துவும் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
எனினும், கட்சிக்கு தொடர்ந்து தொண்டாற்றப் போவதாக சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, அமரீந்தர் சிங் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு நிலவரத்தில், கேரளா, கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி உள்ளனர்.
கோவா முன்னாள் முதல்வர் லூசினோ பெலிரோ அம்மாநிலத்தின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைமை அண்மையில் அவரை நியமித்தது.
இந்நிலையில், அவர் கட்சிப் பதவி, எம்எல்ஏ பதவி ஆகிய பொறுப்புகளில் இருந்து திடீரென விலகியுள்ளார். அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாகக் கூறப்படுகிறது.
இதே போல் கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன் கட்சியை விட்டு விலகினார். மாநில அளவிலான கட்சிப் பொறுப்புகளுக்கு தமது ஆதரவாளர்களை நியமிக்காததால் அவர் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தலைவர்களின் விலகலால் காங்கிரஸ் தலைமை நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

