திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியல் வருவாய் மேலும் அதிகரித்துள்ளது.
உண்டியல் வருமானம் மட்டுமல்லாமல் அறை வாடகை உள்ளிட்ட வருவாய்களும் கூடியுள்ளன. கிருமித்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை 3,000க்கு குறைக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.5 முதல் 10 லட்சம் வரை மட்டுமே தினமும் வருவாய் கிடைத்து வந்தது. மேலும் பக்தர்கள் தங்கும் அறை வாடகைகள், லட்டு விற்பனை உள்ளிட்ட இதர வருவாய்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
தற்போது கிருமித்தொற்று குறைந்துள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரூ.300 கட்டணத்தில் 8,000 தரிசன நுழைவுச் சீட்டுகளும் 8,000 இலவச தரிசன நுழைவுச் சீட்டுகளும் வெளியிடப்பட்டு தினமும் 30,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 25ஆம் தேதி ரூ.2.53 கோடியும் 26ஆம் தேதி ரூ.2.66 கோடியும் 27 ஆம் தேதி ரூ.2.90 கோடியும் கிடைத்தது.
இதற்கு மறுநாள் 28ஆம் தேதி 27,167 பேர் தரிசனம் செய்தனர். ரூ.2.95 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்தது. ஓர் ஆண்டிற்குப் பிறகு உண்டியல் வருமானம் மீண்டும் ரூ.3 கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது.
அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 15ஆம் வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
இதற்கிடையே ஒரு லட்ச ரூபாய் செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று ஏழுமலையான் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தவதாகக் கூறிய பயண நிறுவனம் குறித்து தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

