கிருஷ்ணரை வரைவதில் பெயர்பெற்ற ஜஸ்னா சலீம்

கிருஷ்ணரை வரைவதில் பெயர்பெற்ற ஜஸ்னா சலீம்

2 mins read
aafedafd-97ab-4cdd-b231-c13bcd224359
படம்: இந்திய ஊடகம் -

பத்தனம்திட்டா: இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த 28 வயது ஜஸ்னா சலீம், கிருஷ்ணர் ஓவியங்களால் பிரபலமானவர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இவர் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது ஓவியங்கள் பல்வேறு கோயில்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் இல்லங்களிலும் வைத்து வழிபடப்படுகின்றன.

அண்மையில் பண்டலத்தில் உள்ள உலநாடு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலிலிருந்து வந்த அழைப்பினால், இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பல கோயில்களுக்கு இவரது ஓவியத்தைப் பரிசளித்திருந்தாலும், இவரது சமயம் காரணமாக, கோயில்களுக்குள் அதுவும் கருவறைக்கு அருகே இவர் அனுமதிக்கப்பட்டதில்லை.

முதல் முறையாக, உலநாடு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு, அதுவும் கருவறையிலிருக்கும் கிருஷ்ணரின் முன்னிலையில், தான் வரைந்த கிருஷ்ணர் ஓவியத்தை கோயில் நிர்வாகிகளிடம் இவர் வழங்கினார்.

"பள்ளி நாள்களில், சின்ன சின்ன ஓவியங்களைக்கூட வரைய முடியாமல் அவதிப்பட்டேன் நான். ஆனால், கிருஷ்ணர் ஓவியத்தை வரைய ஆரம்பித்ததும், மிக அழகாக வந்தது. அது தற்செயலாகவே நடந்தது. வீட்டில் கடைக்குட்டி என்பதால், என்ன கண்ணா என்று அன்போடு அழைப்பார்கள். எனவே, கண்ணன் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு, அவரது ஓவியத்தைப் பார்த்ததும் வரைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது," என்கிறார் ஜஸ்னா.

"நான் வரைந்த கிருஷ்ணர் ஓவியங்களை வீட்டில் ஆங்காங்கே வைத்தபோது, வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடந்தன. அது எனக்கு கூடுதல் உற்சாகத்தை வழங்கியது. அதிகமான ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்," என்று கூறினார் ஜஸ்னா.

நன்றி: தினமணி