புதுடெல்லி: பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இனி 'பிஎம் போஜன்' என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது என்றும் அதில் மதிய உணவுத் திட்டம் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது என்றும் 'ஸி இந்துஸ்தான் தமிழ்' ெவளியிட்ட தகவல் தெரிவித்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'பிஎம் போஜன்' என்ற பெயரில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். தற்போது பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் தேசிய மதிய உணவுத் திட்டத்திற்குப் பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,30,795 கோடி செலவிடப்பட உள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே 'பிஎம் போஜன்; திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'பிஎம் போஜன்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர். இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 1,30,794 கோடியாக இருக்கும்.

