புதுெடல்லி: காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவரது வீட்டு முன்பு கூடிய தொண்டர்கள், விரைவில் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று முழக்கமிட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக முதல்வர் மாற்றப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்கு வதற்குள் அக்கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சித்து பதவி விலகினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவரான கபில் சிபல், "காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தலைவர்கள் என்று யாரும் இல்லை. முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காங்கிரசில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும், அப்போதுதான் நாட்டை காப்பாற்ற முடியும்," என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் தலைவரைத் தேர்வு செய்யாததை அவர் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கபில் சிபல் வீட்டிற்குமுன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியைவிட்டு வெளியேறுங்கள் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர். தக்காளிப் பழங்களை அவரது வீட்டை நோக்கி வீசினர். இதில் அவரது கார் சேத மடைந்ததாகத் தெரிகிறது.

