புதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போதும், பிரிட்டன் அரசு தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
இதையடுத்து இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்குப் பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. நாளை முதல் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் பத்து நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும், இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் 72 மணிநேரங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழைப் பெற வேண்டும் என அறிவித்துள்ளது.
பிரிட்டன் அரசு இந்திய பயணிகளுக்கு விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் இந்திய அரசு பிரிட்டன் பயணிகளுக்கு விதித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் 1.4 மில்லியன் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள் என்றும் அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவுதான் என்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ஆலோசகரான பேராசிரியர் சுனீலா கார்க் கூறியுள்ளார்.