மும்பை: போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன், விசாரணையின்போது அழுதபடியே இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
உல்லாசக் கப்பலில் நடந்த விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பில் ஆர்யன் உட்பட எட்டுப் பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆர்யனிடம் விசாரணை நடத்தியபோது அவர் நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கிட்டத்தட்ட நான்காண்டுகளாக அவர் போதைப்பொருள் புழங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பிரிட்டன், துபாய் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தபோதும் அவர் போதைப்பொருள் புழங்கியதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் கூறின.
இந்த விவகாரத்தில் முக்கியமானவர்கள் பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி ஆர்யன் இன்று மனுத்தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தித் திரையுலக நட்சத்திரமான சல்மான்கான் நேற்று இரவு ஷாருக்கானை அவரது வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.