துடைப்பத்தைக் கையிலெடுத்த பிரியங்கா காந்தி

துடைப்பத்தைக் கையிலெடுத்த பிரியங்கா காந்தி

1 mins read
29e2da9f-7851-42bf-8414-6c9cb89a3ed6
தங்கள் தலைவர்க்குக் குப்பை மண்டிய அறையை ஒதுக்கியதை அடுத்து, "இதுதான் உங்களது தூய்மை இந்தியாவா?" என்று காங்கிரஸ் தொண்டர்கள் சாடிவருகின்றனர். காணொளிப்படம் -

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் விவசாயிகள் நால்வர், செய்தியாளர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் மாண்டுபோயினர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இன்று காலை விரைந்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் சீதாப்பூரில் உள்ள வட்டாரக் காவல்துறையின் விருந்தினர் இல்லத்தில் பிரியங்கா தடுத்துவைக்கப்பட்டார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை சுத்தம் செய்யப்படாமல் தூசி மண்டியிருந்தது. இதனையடுத்து, துடைப்பம் ஒன்றைக் கேட்டுப் பெற்ற அவர், தாமே அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டார்.

அந்தக் காணொளி ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளருக்குத் துப்புரவான ஓர் அறையை ஒதுக்காததையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினரைக் கடுமையாகச் சாடிவருகின்றனர்.

"இதுதான் உங்களது தூய்மை இந்தியாவா? எங்கள் தலைவர் எந்த அமளியிலும் ஈடுபடாமல் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்வதைப் பாருங்கள்," என்றார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.