இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்தியாவின் கதவு திறக்கப்படுகிறது.
கொள்ளைநோய் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய எல்லைகள் மூடப்பட்டிருந்தன.
உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால். மன்னர்களின் அரண்மனை, பிரபல கோயில்கள், வனவிலங்கு காப்பகம், யானை சரணாலயம், கடற்கரை உட்பட சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல 2020 மார்ச் மாதத்திலிருந்து தடை விதிக்கப்பட்டது. அப்போதுதான் கிருமித்தொற்று பரவத் தொடங்கியது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இவ்வாண்டின் தொடக்கத்தில் தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தை எட்டியது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பொருளியலுக்கு முக்கிய தூணாக விளங்கும் தொழில்துறையினர் அழுத்தம் கொடுத்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முன்வந்துள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து சிறப்பு விமானங்களில் வரும் சுற்றுப்பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனால் கிருமிப்பரவல் தடுப்பு நடைமுறைகளை சுற்றுப்பயணிகள் எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
இந்தியா, ஆரம்பத்தில் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதித்தது.
பின்னர் வர்த்தகர்கள், தூதர்கள் உள்ளிட்டவர்களுக்குப் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இருந்தாலும் விடுமுறையில் வருபவர்களுக்கு இந்தியா கதவை மூடியே வைத்திருந்தது.