மதுரை: பொதுக் காப்பீட்டு நிறுவனம் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்குரிய பயிற்சியை இந்தி மொழியில் மட்டும் நடத்துவதை ஏற்க இயலாது என மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளா.
இது தொடர்பாக அவர் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை," என்று வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
எனவே தேர்வுக்கு முன்பாக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு என குறுகிய கால பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
"ஆங்கில மொழி தாளுக்கான பயிற்சி வகுப்பும் கூட இந்தியில்தான் நடத்தப்பட்டது. எனவே தேர்வர்களுக்கு புரியும் மொழியில் பயிற்சி வகுப்புகளை நடத்திட வேண்டும். வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேரா வண்ணம் உறுதி செய்திட வேண்டும்," என்று சு.வெங்கடேசன் எம்பி தமது கடிதத்தில் கூறியுள்ளார்.