புதுடெல்லி: நிலக்கரி உற்பத்தியில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் எதிரொலியாகப் பல்வேறு மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மின் உற்பத்தியில் சுமார் 70 விழுக்காடு நிலக்கரியை நம்பியே உள்ளது. நிலக்கரி இல்லையெனில் சிக்கலாகிவிடும்.
இந்நிலையில், அண்மைய சில தினங்களாக நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், கையிருப்பில் உள்ள நிலக்கரியானது தேவைப்படும் அளவுக்கு ஏற்ப இல்லை.
இதனால் அண்மைய சில தினங்களாக சில அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
உலகச் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்தால் அரசுக்குப் பெரும் தொகை செலவாகும். கடந்த 4ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் மூன்று நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருந்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதனால் டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.