இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு ‘கோஏர்’ விமானத்தில் ஏறிய சிறுமிக்கு மறக்கமுடியாத அனுபவம் ஒன்று ஏற்பட்டது.
அந்தச் சிறுமியின் உற்சாகத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
அதில், தமது தந்தைதான் விமானத்தை இயக்குகிறார் என்பதை அறிந்த அச்சிறுமி, தந்தையை நோக்கி கையசைக்கிறார். சிறுமியின் தந்தை விமானி அறைக்கு வெளியே நிற்கிறார்.
விமானத்தில் பயணிகள் ஏறுகையில், தம் மகளைப் பார்த்து புன்னகையுடன் அந்த விமானி பதிலுக்குக் கையசைக்கிறார்.
அந்தக் காணொளி, அச்சிறுமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
அந்தப் பட விளக்கத்தில், “என் தந்தையுடன் முதல் விமானப் பயணம் இது. என்னை டெல்லிக்கு அவர் அழைத்துச் சென்றார். அவரைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகம் கரைபுரண்டது. இதுவே எனது ஆகச் சிறந்த விமானப் பயணம்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த வாரம் பதிவிடப்பட்டதை அடுத்து, அந்தக் காணொளி 1.2 மில்லியனுக்கும் அதிக முறை பார்க்கப்பட்டுள்ளது.