புதுடெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா உறுதியான அரசாங்கத்தைப் பெற்றுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'தற்சார்பு இந்தியா' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை தெளிவாக இருப்பதால் நாட்டில் சீர்திருத்தங்கள் சாத்தியமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதே தமது அரசின் கொள்கை என்று குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வெற்றிகரமாக தனியார்மயமாக்கி உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இதேபோல மேலும் பல தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.
தேச நலனையும் பல்வேறு பங்குதாரர்களின் தேவையையும் கருத்தில் கொண்டே மத்திய அரசு செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே விண்வெளி முதல் பாதுகாப்புத்துறை வரை பல துறைகளில் தனியாருக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"இனி அரசும் ஒரு கூட்டாளியாக இருந்து, தொழில்துறை, இளம் கண்டுபிடிப்பாளர்கள், புதிய நிறுவனங்கள் உருவாக தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்," என்றார் பிரதமர் மோடி.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வலிமை எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்குத் தடையாக உள்ளவற்றை அகற்றுவது அரசின் பொறுப்பு என்றார்.
"தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல; அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தி," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் கொள்கை தெளிவானது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அரசின் தேவை அவசியமில்லாத பெரும்பாலான துறைகள் தனியாருக்குத் திறந்துவிடப்படும் என்றார்.
எனினும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமர் மோடியின் இத்தகைய முடிவுகளால் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் பலனடைவதாகவும் அவை விமர்சித்துள்ளன.