புதுடெல்லி: தேசிய சொத்துகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சாடி உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏர் இந்தியா விற்பனையால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது. மொத்தம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
"டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போன்றதுதான். பட்டப்பகலில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளையைப்போல் நடந்துள்ளது.
"டாடா நிறுவனம் ரூ.15 ஆயிரத்து 300 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், அது மறுசீரமைக்கப்பட்டுவிடும். எனவே மீதமுள்ள ரூ.2,700 கோடியை மட்டுமே மத்திய அரசுக்கு கொடுக்கும்," என்றார் சீதாராம் யெச்சூரி.
ஏர் இந்தியாவின் மீதிக் கடன் ரூ.46,262 கோடியை மத்திய அரசுதான் ஏற்க வேண்டி இருக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், அந்தக் கடன் தொகையானது பொதுமக்கள் தலையில்தான் சுமத்தப்படும் என்றார். ஆனால், ஏர் இந்தியா வாங்கிய சொத்துகள் எல்லாம் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.