லக்னோ: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைக் கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நேற்று அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் காங்கிரசாரும் நாடு தழுவிய அளவில் மௌனம் காக்கும் போராட்டத்தை நடத்தினர்.
லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தாரும் பங்கேற்றனர்.
இதற்கிடையே, வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இணை அமைச்சர் அஜ்ய மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை அக்டோபர் 12 முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
லக்னோவில் நடைபெற்ற மௌனம் காக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். மத்திய அமைச்சர் அஜ்ய மிஸ்ராவை பதவியில் இருந்த நீக்க வலியுறுத்தி லக்னோவில் உள்ள காந்தி சிலையின் முன்பு அந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வன்முறை விவகாரம் தொடர்பில் மத்திய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யாமல் பாஜக நீதியைத் தடுப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

