புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிராகப் பாடுபட அனைத்துலக நாடுகள் கைகோக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
கஜகஸ்தான் தலைநகர் நுர் சுல்தானில் நேற்று ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கை அமைப்பின் (சிஐசிஏ-சைகா) ஆறாவது மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அனைத்து நாடுகளும் செழிப்புற வேண்டும். அதற்கு அங்கே அமைதியான சூழல் நிலவ வேண்டும். இதுவே இந்தியாவின் ஆசை. ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் வட்டார ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை அளிக்க அனைத்துலக நாடுகள் தவறக்கூடாது.
அமைதியும் வளர்ச்சியும் நமது பொதுவான குறிக்கோள் என்றால், நாம் தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். அதுவே நமக்கு மிகப்பெரிய எதிரி.
எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது தீவிரவாதத்தின் மற்றொரு வடிவம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அனைத்துலகத் தீவிரவாதம் என்ற அரக்கனுக்கு எதிராக அனைத்து நாடுகளும் கைகோத்துப் போராட இணக்கம் காணவேண்டும்.
பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்தது போல, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தை உலகிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
ஆப்கான் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு சைகா அமைப்பு ஒரு நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.-பிடிஐ