புதுடெல்லி: போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்களை நிறுத்துவதோடு, அதன் இயக்கத்தையும் முழுமையாக அணைத்து வைக்கவேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்(படம்), "வாரத்தில் ஒரு நாளாவது வாகனத்தைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும். மேலும், சமிக்ஞைகளில் சிவப்பு விளக்கு எரியும்போது, வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் திட்டம் வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் இதைக் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், இந்தியாவில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலேயே அதிகளவு மாசு கலந்துவிட்டதாக ஆய்வு ஒன்றும் எச்சரிக்கிறது. இதையடுத்து காற்று மாசுவைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.