திருவனந்தபுரம்: கருநாகத்தை விட்டு தீண்டவைத்து மனைவியின் உயிரைப் பறித்துள்ள கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் சூரஜ் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் கடந்த திங்களன்று தீர்ப்பு கூறிய நிலையில், தண்டனை விவரங்களை நீதிபதி எம்.மனோஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.
தீர்ப்பில் ருத்ராவைக் கொலை செய்த சூரஜ்ஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார்.
விசாரணையில், பாம்பு பசியாக இருந்தால் வெறித்தனமாக கடிக்கும் என இணையத்தில் தேடிக் கண்டுபிடித்த சூரஜ் கருநாகப்பாம்பை ஏழுநாட்கள் பட்டினியாகப் போட்டு உத்ராவைத் தீண்டவைத்த விவரம் தெரியவந்தது.
இதற்கிடையே, மகளின் கொலை வழக்கு தீர்ப்பில் திருப்தி இல்லை என்றும் மகளைக் கொடூரமாக கொன்றவருக்கு தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் உத்ராவின் தாய் மணிமேகலை கூறியுள்ளார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் அருகே அரூர் பகுதியில் வசித்தவர் சூரஜ், 27. தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உத்ரா, 25, என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின்போது ருத்ரா வுக்கு 100 சவரன் தங்க நகைகள், பத்து லட்சம் ரொக்கப் பணம், மூன்றரை ஏக்கர் நிலம், கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் மகனும் உள்ளார்.
திருமணமான சில மாதங்களி லேயே வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்ட சூரஜ், ருத்ராவை கொல்ல இருமுறை வீட்டுக்குள் பாம்பை விட்டுள்ளார்.
முதல்முறை இவர் விட்ட அணலி என்ற பாம்பு ருத்ராவின் காலில் கடிக்க, 40 நாட்களில் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர்பிழைத்துள்ளார். இதையடுத்து, பாம்பாட்டி சுரேஷிடம் ரூ.10,000 கொடுத்து கருநாகப் பாம்பை வாங்கி மீண்டும் ருத்ராவை தீண்ட விட்டதை அடுத்து, ருத்ரா உயிரிழந்தார்.