புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தில் வாலிபர் ஒருவர் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வாலிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்ட்லி என்ற இடத்தில் தடுப்பு வேலியில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் தொங்கவிடப்பட்டிந்தார்.
"நேற்று காலை 5.00 மணி அளவில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபரின் உடலை மீட்டுள்ளோம்.
"இந்தச் சம்பவத்தைக் கொலையாகப் பதிவு செய்துள்ளோம். தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது," என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் போலிஸ் அதிகாரியான சந்தீப் கிர்வார் கூறியதாக என்டிடிவி குறிப்பிட்டது.
வாலிபரை 'நிஹாங்ஸ்' என்ற சீக்கிய போராளிக் குழுவினர் கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட வாலிபர், 39 வயது லக்பீர் சிங் என போலிசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியான முதல் காணொளியில் மணிக்கட்டு வெட்டப்பட்ட வாலிபரின் முன்னால் நிஹாங் குழு உறுப்பினர்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததாக சிலர் கூறினர்.
மற்றொரு காணொளி, வாலிபர் தலைகீழாக தொடங்கவிடப்பட்டதையும் 3வது காணொளி, தரையில் கிடந்த அந்த வாலிபரின் கடைசித் தருணத்தை சிலர் தங்களுடைய கைத்தொலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்ததையும் காட்டியது.
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாகக் கூறி வாலிபரை 'நிஹாங்ஸ்' குழுவினர் அவரை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. போலிசார் விசாரித்து வருகின்றனர்.