போபால்: இந்தியாவில் கூட்டத்தினர் மீது கார் மோதல் சம்பவங்கள் மூன்றாகி உள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் பேரணியின்போது மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் பதால்கோன் எனும் பகுதியில் விஜயதசமி பண்டிகை நாளில் துர்க்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக ஆற்றுக்குப் பக்தர்கள் திரளாக சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று அவர்களை பின்னாலிருந்து மோதியது. பலத்த காயம் அடைந்த பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. லக்கிம்பூரில் பரபரப்பு அடங்குவதற்குள் சட்டீஸ்கர் சம்பவம் இடம்பெற்றது.
இந்நிலையில், மத்தியப் பிரசேத்தில் போபால் நகரில் சனிக்கிழமை பின்நேரத்தில் பக்தர்கள் துர்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்க சென்றுகொண்டு இருந்தபோது வேகமாக வந்த ஒரு கார் அவர்களை மோதித் தள்ளியது.
பதின்ம வயதுள்ள ஒருவர் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி பெரும் பரபரப்பாகி இருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறின. அதிகாரிகள் விசாரணைநடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்

