புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, கட்சியின் முழு நேர தலைவர் தானே என்று ஆவேசமாகக் கூறி அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும், அமைப்பு ரீதியில் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் 23 பேர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் சனிக்கிழமை நடந்தது.
அதில் பேசிய சோனியா, யாரும் தன்னுடன் ஊடகம் வழியாக பேசத் தேவையில்லை என்றார்.
ஒட்டுமொத்த கட்சிக்கும் புத்துயிரூட்ட வேண்டி இருப்பதாகவும் அதற்குக் கட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சி நலன்களை முதன்மையாகக் கருதி சுய கட்டுப்பாடு, ஒழுங்குடன் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய சோனியா, தன் பொறுப்புகளைத் தான் செவ்வனே செய்து வருவதாகக் கூறினார்.
"நான் பொது முக்கியத்துவம் வாய்ந்த, கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளை ஒருபோதும் கவனிக்காமல் விட்டுவிடவில்லை. மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்று நானும் அவற்றைப் பிரதமரிடம் எடுத்துச்சென்றிருக்கிறேன்.
"ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சித் தலைவர்களுடன் நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கூட்டறிக்கைகள் வெளியிடுகிறோம்.
"நமது உத்தியை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைத்துள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவரை ஜூன் 30ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுத்து விட முடிவு செய்திருந்ததாகவும் கொரோனா 2வது அலையால் அது காலவரம்பின்றி ஒத்தி போடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் முழுமையான அமைப்புத் தேர்தல்களுக்கான அட்டவணை, செயற்குழு உறுப்பினர்கள் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

