திருவனந்தபுரம்: கேரளாவில் நீடித்து வரும் கனமழையால் சேதங்களும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று மாலை நிலவரப்படி, பலியானோர் எண்ணிக்கை 27ஆக கூடியுள்ளது.
மழையால் ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளில் சிக்கி பல வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. அம்மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலம்புழா, மலங்கரா, நெய்யாறு, அருவிக்கரா, வாளையாறு, போதுண்டி, புள்ளியாய், பரம்பிக்குளம், காஞ்சிரபுழா உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோரங்களில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சில காணொளிப் பதிவுகள் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளன. ஒன்பது முக்கிய அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பெரும் இழப்புகளை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, மழை, வெள்ள நிலவரம் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
நிலச்சரிவில் சிக்கி பலியாவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது என்றும் மீட்புப் பணிகளில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடற்படை விமானம் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பத்தனம் திட்டா மாவட்டத்தில் பெய்துள்ள பலத்த மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சபரிமலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.