சண்டிகர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை (படம்) ஹரியானா காவல்துறை கடந்த 16ஆம் தேதி கைது செய்தது. சில மணி நேரங்களுக்குப்பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் யுவராஜ் இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார். அப்போது, சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹலின் டிக்டாக் காணொளிகள் தொடர்பிலும் அவர்கள் பேசினர்.
அச்சமயம், சஹல் குறித்து யுவராஜ் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பின.
இந்நிலையில், "நீதிமன்ற உத்தரவின்படி, யுவராஜைக் கைது செய்து, பின்னர் இடைக்காலப் பிணையில் விடுவித்துவிட்டோம்," என்று ஹரியானாவின் ஹன்சி நகரக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின்கீழ் யுவராஜைக் கைதுசெய்ய வேண்டுமென ரஜத் கல்சன் என்ற சமூகச் செயற்பாட்டாளர் புகார் அளித்திருந்தார்.
முன்னதாக, "என் நண்பர்களுடன் உரையாடியபோது நான் சொன்னவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அறிகிறேன். அது தேவையற்றது. இருப்பினும், பொறுப்புள்ள ஓர் இந்தியனாக, எவரது உணர்வுகளை அல்லது எண்ணங்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்," என்று யுவராஜ் சிங் விளக்கம் அளித்திருந்தார்.