பெங்களூரு: எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இந்தியா நான்கு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் அறிவியல் செயலாளர் ஆர்.உமாமகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா நெருக்கடி காரணமாக இந்திய வீரர்களை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதுஎன்றார்.
விண்வெளிக்கு அடுத்த ஆண்டே இந்திய வீரர்களை அனுப்பும் திட்டத்தில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அதற்கான வாய்ப்பைத் தவற விட்டுவிட்டதாக தெரிவித்தார்.
"இந்தியா சார்பில் மனிதர்கள் அல்லாத விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமானது இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான விண்கலம் முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட உள்ளது," என்று உமாமகேஷ்வரன் கூறினார்.
மற்ற தொழில்களைப் போல் அல்லாமல் விண்வெளித்துறையில் கட்டுமானங்கள், கருவிகளைத் தயாரிப்பது ஆகியவை தொடர்பில் நேரடியாக களத்தில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று உமாமகேஷ்வரன் மேலும் தெரிவித்தார்.