பெங்களூரு: சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த தனியார் நிறுவனங்களில் மத்திய வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
அசாம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெங்களூருவில் இயங்கி வரும் 'டிசைன்பாக்ஸ்டு' என்ற நிறுவனம் பிரசார நடவடிக்கைகளுக்கும் வாக்கு சேகரிப்பதற்கும் வியூக ஆலோசகராகச் செயல்பட்டது.
இதே போல் சூரத், சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வரும் இதர சில நிறுவனங்களும் காங்கிரசுக்காக வியூகம் அமைத்துக் கொடுத்தன.
இந்நிலையில், ஏழு நகரங்களில் இயங்கி வரும் ஏழு வியூக நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அப்போது கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், 70 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனங்கள் போலிக் கணக்குகள் காட்டியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை நடந்து கொண்டிருப்பதாக பெங்களூரு நிறுவனத்தின் நிர்வாகத்தரப்பு கூறிஉள்ளது.

