அகமதாபாத்: சிறுநீரகக் கல்லை அகற்றுவதற்குப் பதிலாக சிறுநீரகத்தையே அகற்றியதால் ஆடவர் உயிரிழந்த சம்பவத்தில், அவரின் குடும்பத்தினர்க்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க (S$19,700) உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்தது.
முதுகுவலியாலும் சிறுநீர் கழிக்க சிரமமாக இருந்ததாலும் தேவேந்திரபாய் ராவல் என்ற அந்த ஆடவர் 2011 மே மாதம் பாலாசினோர் நகரில் உள்ள கேஎம்ஜி பொது மருத்துவமனைக்குச் சென்றார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவரது இடது சிறுநீரகத்தில் 15 மில்லிமீட்டர் அளவிற்கு ஒரு கல் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சைமூலம் அக்கல்லை அகற்ற முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, அதே ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தேவேந்திரபாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன்பிற்கு, நோயாளியின் நலன் கருதி, சிறுநீரகக் கல்லுக்குப் பதிலாக அவரது இடது சிறுநீரகத்தையே எடுத்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
அப்படி இடது சிறுநீரகத்தை எடுத்தபின்னும் சிறுநீர் கழிக்க தேவேந்திரபாய் மிகவும் சிரமப்பட்டார். அதன்பின் வேறு இரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 2012 ஜனவரி 8ஆம் தேதி அவர் இறந்துபோனார்.
அதனைத் தொடர்ந்து, குஜராத் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் தேவேந்திரபாயின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஆணையம், கேஎம்ஜி மருத்துவமனை இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.