புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஊடுருவி, ரூ.5 கோடி பணமெடுக்க முயன்றதாகக் கூறி, எச்டிஎஃப்சி வங்கி ஊழியர்கள் மூவர் உட்பட 12 பேரை டெல்லி இணையக் குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.
அந்தத் தொழிலதிபரின் கணக்கில் ரூ.200 கோடி இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவரது கணக்கில் இருந்து தங்களது கணக்குகளுக்குப் பணத்தை மாற்ற 66 முறை முயன்றதாகவும் போலிஸ் தெரிவித்தது.
"என்ஆர்ஐ வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக எச்டிஎஃப்சி வங்கியிடம் இருந்து புகார் வந்தது. மோசடியாகப் பெறப்பட்ட காசோலைப் புத்தகத்தைக் கொண்டு அந்தக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்றுள்ளனர். 'கேஒய்சி'யில் இடம்பெற்றுள்ள கைபேசி எண்ணையும் மாற்ற முயன்றுள்ளனர்," என்று டெல்லி இணையக் குற்றப்பிரிவு போலிஸ் உயரதிகாரி கே.பி.எஸ்.மல்ஹோத்ரா கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி தெரிவிக்கிறது.
இதனையடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, சந்தேகப் பேர்வழிகளை போலிசார் அடையாளம் கண்டனர். டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 20 இடங்களில் அவர்கள் அதிரடிச் சோதனை நடத்தி, 12 பேரைக் கைது செய்தனர்.
கைதானவர்களில் எச்டிஎஃப்சி வங்கியில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராகப் பணியாற்றிய 32 வயதுப் பெண் ஒருவரும் அடங்குவார்.
மோசடித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டவன், வெகு நாள்களாக அந்தக் கணக்கில் பரிவர்த்தனை எதுவும் இடம்பெறாததையும் அதில் ஏராளமான பணம் இருப்பதையும் அறிந்து, பின்னர் தன் கூட்டாளிகள் மூவரைச் சேர்த்துக்கொண்டு இந்தச் சதியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
மோசடி மூலம் வரும் பணத்தில் பங்கு தருவதாக ஆசைகாட்டி, எச்டிஎஃப்சி வங்கியின் அந்தப் பெண் ஊழியரை அவர்கள் தங்களது வலையில் வீழ்த்தி உள்ளனர்.